Tuesday, February 22, 2011

சுமதி வந்திருக்கிறாள் - ரகசியமாய் ரகசியமாய்

சுமதி வந்திருக்கிறாள்....

என் மனைவி சுமதி. ஆசைமிகு மனைவி சுமதி. எங்கள் தலை தீபாவளிக்காக அவள் பிறந்தகம் வந்திருக்கிறோம். அவளது புத்தகங்களை பார்க்கும்போது எனக்கு எங்கள் இரண்டாம் சந்திப்பு ஞாபகம் வருகிறது. அதில் சுமதி, தன் கனவான அமெரிக்க படிப்பு பற்றியும், அதை தான் செய்ய முடியாத நிலை பற்றியும் கூறினாள். அதற்கான காரணங்கள் பற்றியும் கூறினாள். அப்பொழுது எனக்கு அவளை மிகவும் பிடித்துப்போனது. எப்படியாவது அவளை அமெரிக்காவில் படிக்க வைப்பது என்று முடிவு செய்தேன்.

என் பெயர் சுந்தர். நான் ஒரு MNCஇல் வேலை பார்க்கிறேன். இன்னும் சில மாதங்களில் என் வேலைக்காக அமெரிக்கா செல்ல போகிறோம். ஆம், சுமதியும் கூட தான்! அவளுக்கு அங்கு படிக்க ஏற்பாடும் செய்து விட்டோம். இந்த தீபாவளி திருநாளன்று இவர்கள் தெருவே கூடி கொண்டாடுவது மிகவும் ஆச்சர்யமாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது. இன்னும் சில வருடங்களுக்கு இதையெல்லாம் மிஸ் செய்ய போகிறோம்! சோ, இப்பொழுதே இதையெல்லாம் என்ஜாய் செய்து கொள்கிறோம். ஆனால், ஒரு ரகசியம் சொல்கிறேன். நாங்கள் அங்கும் ஒரு குட்டி தீபாவளி இதே தெரு மக்களுடன் கொண்டாட போகிறோம்! எப்படி தெரியுமா? சுரேஷுடன் தான்! சுரேஷ் சுமதியின் அருமை நண்பன். அவனுக்காக தன் படிப்பை விட்ட சுமதி, அவன் படிக்க போகும் அதே கல்லூரியில் படிக்க போகிறாள். இருவரும் ஒரே கல்லூரி என்ற விஷயம் என்னை தவிர யாருக்கும் தெரியாது, இந்த நிமிடம் வரை. ஆம்! சுமதிக்கு கூட! இன்று இரவு எங்கள் தலை தீபாவளி விருந்துக்கு எல்லாரையும் அத்தை அழைத்திருக்கிறார்கள். அப்பொழுதுதான் சுமதி, தன் பெற்றோரிடம் நாங்கள் அமெரிக்கா செல்ல போவதையும் தான் படிக்க போவதையும் சொல்ல போகிறாள். அப்போது, சாரதா auntyயும் சுரேஷும் இருக்க ஏற்பாடு செய்து விட்டேன். அவர்கள் சுமதியின் படிப்பை பற்றி கவலைபடுவதாக தெரிகிறது. அதை பார்த்து அத்தையும் கவலை படுகிறார்கள். ஒரே கல்லில் இரண்டு மாங்காய்! எல்லார் கவலையும் தீரும்; தீபாவளியும் இனிய தீபாவளியாக நிறைவு பெறும். சுரேஷும் சுமதியும் மறுபடியும் ஒரே இடத்தில், ஒன்றாக படிக்க போவதை அறியும்போது எல்லாரும் எவ்வளவு சந்தோஷபடுவார்கள் என்று நினைக்கும்போதே எனக்கு இன்னும் சந்தோஷமாகவும் ஆர்வமாகவும் இருக்கிறது. இதுவே நான் என் மனைவிக்கு தரும் தலை தீபாவளி பரிசு :) இன்று இரவு விருந்து அமர்களமான, யாரும் மறக்க முடியாத விருந்தாக அமைய போகிறது! சோ, அது வரை, இந்த ரகசியத்தை நீங்கள் யாரிடமும் சொல்லிவிட மாட்டீர்கள் தானே?

1 comment:

Aarthi@Paperandme said...

intha 'ragasiya' twist oru swarasyathai yerpaduthi ullathu.. waiting for the next issue..